சென்னை: திமுகவுக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் இடையிலான உறவு தேர்தல் கூட்டணிக்கு அப்பாற்பட்டது என்றும், தமிழ்நாட்டின் நலனுக்காக தொடர்ந்து திமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் திமுக மற்றும் ம.ம.க. இடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் பல கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிட்டபோதும், ம.ம.க. கொள்கை உணர்வுடன் திமுக கூட்டணியில் நிலைத்து நின்றதை அவர் நினைவு கூர்ந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், திமுக கூட்டணியின் வெற்றிக்காக ம.ம.க. தொண்டர்கள் பெரும் உழைப்பை வழங்கியதாக அவர் கூறினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ம.ம.க.வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போதிலும், நாட்டின் சூழலைக் கருத்தில் கொண்டு, மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக ம.ம.க. தொண்டர்கள் உழைத்ததாக ஜவாஹிருல்லா தெரிவித்தார். சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்ட சூழலில், ம.ம.க.வின் கட்சியும் ரத்து செய்யப்பட்டதாகவும், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்சியின் பதிவை மீட்க தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே உயர்நிலைக் குழுவின் ஐந்தாவது தீர்மானம் என்றும் அவர் விளக்கினார்.
புதிதாக அமைந்துள்ள அரசுடன் தனிச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்ற ஆதங்கத்தில் ஐந்தாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பரப்பப்படும் கருத்து முற்றிலும் தவறு என ஜவாஹிருல்லா மறுத்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் எதிர்ப்பு போராட்டங்கள் முதல் பல்வேறு தருணங்களில் திமுகவுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்து செயல்பட்டதாக அவர் கூறினார். அதேபோல், மாநில உரிமைகள் பாதுகாப்பு, தமிழ் மொழி மீதான ஒடுக்குமுறை எதிர்ப்பு, ஆளுநரின் அத்துமீறல் போன்ற பல விஷயங்களில் ஒருமித்த உணர்வுடன் திமுகவுடன் இணைந்து களம் கண்டதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, தவறான புரிதலால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் நலனைக் காக்க தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்று அவர் உறுதியளித்தார்.