சத்தீஸ்கர் மாநிலத்தில், பெண்களுக்கான அரசு உதவித்தொகை திட்டத்தில் ஒரு ஆண் நபர் கடந்த 12 மாதங்களாக முறைகேடாக பணம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி அம்பலமானதை அடுத்து, அவர் பெற்ற முழுத் தொகையையும் அரசு திரும்பப் பெற்றுள்ளது.
கைராகர் மாவட்டத்தின் முதிப்பார் கிராமத்தைச் சேர்ந்த திலோக் சாகு என்ற ஆண், 'மஹதாரி வந்தன் யோஜனா' என்ற அரசுத் திட்டம் தொடங்கப்பட்டபோது, அதன் செயல்பாட்டைச் சோதிக்கும் நோக்கில் தனது பெயரிலேயே ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, பயனாளி பெயர் மற்றும் கணவர் பெயர் ஆகிய இரண்டு இடங்களிலும் 'திலோக் சாகு' என்றே குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், 21 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் விதவைகள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். ஆனால், திலோக் சாகுவின் விண்ணப்பத்தை அதிகாரிகள் முறையாகச் சரிபார்க்கவில்லை.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் மேற்பார்வையாளர் மட்டத்தில் அடுத்தடுத்து ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவரது பெயர் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த அதிகாரிகளின் அலட்சியத்தால், திலோக் சாகுவின் வங்கிக் கணக்கிற்கு கடந்த 12 மாதங்களாக மகளிர் உதவித்தொகை தொடர்ந்து அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் இந்தத் திட்டத்தின் பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்தபோது, திலோக் சாகு என்ற ஆணின் பெயர் அதில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
முறைகேடு அம்பலமானதை அடுத்து, திலோக் சாகுவின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்ட முழுத் தொகையையும் அரசிடம் திரும்பச் செலுத்துமாறு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் வங்கிக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி, முழுத் தொகையும் அரசு கணக்கில் திரும்பப் பெறப்பட்டது. மேலும், அந்தப் போலி விண்ணப்பம் நிரந்தரமாக முடக்கப்பட்டு, திட்டத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
ஒரு ஆண் விண்ணப்பித்திருந்தும், அதனைப் பெண்களுக்கான திட்டத்தில் சேர்த்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சரிபார்ப்பு அதிகாரிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதே திட்டத்தில் இதற்கு முன்னர், பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் ஜானி சின்ஸ் பெயர்களிலும் போலி ஆவணங்கள் மூலம் கணக்குகள் தொடங்கப்பட்டு நிதி முறைகேடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
