வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மீது நில மோசடி மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரைச் சேர்ந்த அன்புக்கரசு என்பவர், கடந்த 2024 ஆம் ஆண்டு சித்தார்த் மீது புகார் அளித்திருந்தார். தனது பெயரில் இருந்த பவர் பத்திரத்தை பெற்றுக்கொண்டு, பணம் தராமல் ஏமாற்றியதாகவும், மேலும் சாதியை குறிப்பிட்டு திட்டியதாகவும் அவர் புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சித்தார்த், திமுக கவுன்சிலர் ராணி, எம்பியின் உதவியாளர் ஆசைத்தம்பி, நாராயணன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த திமுக ஆட்சியில் இந்த புகார் அளிக்கப்பட்டபோது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால், தற்போது தவெக ஆட்சி அமைந்த நிலையில், பணமோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சித்தார்த் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது பணமோசடி, தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்குப்பதிவு திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்பியின் மகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் பின்னணி என்ன என்பது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.