டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் 'பத்ம பூஷண்' விருதை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் மொத்தம் 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னணி பாடகி அல்கா யாக்னிக் அவர்களும் 'பத்ம பூஷண்' விருதைப் பெற்றார். நடிகர் மாதவனுக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் அறிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண், மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதற்கட்டமாக கடந்த மாதம் 25 ஆம் தேதி 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று 65 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். நடிகர் மம்முட்டி, மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், தமிழகத்தின் புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம், சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த உயரிய விருதுகள், அவர்களின் பங்களிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது. நடிகர் மம்முட்டிக்கு 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது, அவரது கலைப் பயணத்திற்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும்.