லக்னோ: ஏகானா மைதானத்தில் நடைபெறும் 2026 ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை மிட்செல் மார்ஷ் திணறடித்தார். அவர் 51 பந்துகளில் 107 ரன்கள் குவித்து சரவெடியாக வெடித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென பெய்த மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அவர் சதம் அடிக்கும் முன்பும் ஆட்டம் பல நிமிடங்கள் தடைபட்டது. அதற்கிடையே அவர் சதம் அடித்தார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் இளம் வீரர் அர்ஷின் குல்கர்னி களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்தே மார்ஷ் அதிரடியை வெளிப்படுத்தினார். பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், பவர்பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களில் லக்னோ அணியை 68 ரன்களுக்கு அழைத்துச் சென்றார். இது இந்த சீசனில் லக்னோ மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் ஆகும்.
மிட்செல் மார்ஷ் வெறும் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த போது மழை குறுக்கிட்டது. ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த போது, இரவு 8:20 மணியளவில் லக்னோவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் நடுவர்கள் ஆட்டத்தை உடனடியாக நிறுத்தினர். மைதான ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு ஆடுகளத்தை மூடினர். மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவிய நிலையில், 9 மணிக்கு மழை முழுமையாக நின்று ஆட்டம் மீண்டும் துவங்கியது.
அதன் பின்னும் அதிரடியை தொடர்ந்த மார்ஷ் 51 பந்துகளில் 107 ரன் குவித்து இருந்தார். இதில் 9 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. அதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டது. அப்போது 14 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 1 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. நிக்கோலஸ் பூரன் 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து மார்ஷ் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.