தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறைந்த மின்னழுத்தப் பிரச்சனை தீவிரமடைந்து, பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மின்னழுத்தம் சீரற்று ஏற்ற இறக்கமாக வருவதால், வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்விசிறி, ஏசி, மோட்டார் போன்ற சாதனங்கள் சரியாக இயங்கவில்லை. மேலும், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, இன்வெர்ட்டர் போன்ற விலை உயர்ந்த மின்சாதனங்களும் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், 'சென்னை முதல் கோவை வரை நிலவும் இந்த குறைந்த மின்னழுத்தப் பிரச்சனையால், மக்களின் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடைவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. வெயில் காலம் முடிவடைந்த பின்னரும், மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தமிழக அரசு, மக்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது. இந்த நிர்வாகத் தோல்வியும், அரசின் மெத்தனப் போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது' என்று தெரிவித்துள்ளார்.
சிறு, குறுந்தொழில் நிறுவனங்களும் இந்த குறைந்த மின்னழுத்தப் பிரச்சனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கோவை, விழுப்புரம் போன்ற தொழில் நகரங்களில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பழுதடைந்து, உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளதாகத் தொழில்துறையினரே வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொழில் அமைப்புகளும் புகார் தெரிவித்துள்ளன. மின்மாற்றிகள் போதுமானதாக இல்லாதது, மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகள், மற்றும் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாதது போன்றவையே குறைந்த மின்னழுத்தப் பிரச்சனைக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் மேலும் கூறுகையில், 'ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொழில்துறையைச் சீரழித்த பெருமை இந்த அரசையே சாரும். மின் வாரியப் பராமரிப்புப் பணிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொள்ளும் நிலையில், மின்துறை அமைச்சர் வெறும் வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, இப்பிரச்சனைக்குத் தொழில்நுட்ப ரீதியாகப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். இந்தச் சிக்கலான சூழ்நிலையில், அரசு உடனடியாகத் தலையிட்டு, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

