தமிழ்நாட்டிற்கு புதிய மாவட்டம் உருவாகும் என வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது கும்பகோணம் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் மாநகரம், காவிரி மற்றும் அரசலாறு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும், கும்பகோணம் வெற்றிலை, திருப்புவனம் பட்டு, நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்கு மற்றும் பூஜை சாமான்கள் வாங்க வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத், 'கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அவர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பருவ கால மாற்றங்கள் நிகழும் எல்நினோ கால கட்டத்தில் காவிரி டெல்டா பாசன பகுதி மக்களுக்கு உகந்த பயிர்களை சாகுபடி செய்ய ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.