கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்து 22 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த துயர சம்பவத்தின் நினைவாக, இன்று மாலை மகாமக குளத்தில் 94 மோட்ச தீபங்கள் ஏற்றப்பட உள்ளன.
சம்பவம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில், உயிரிழந்த 94 குழந்தைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு திரண்டிருந்த குழந்தைகளின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். குழந்தைகளின் புகைப்படங்களுக்கு முன்பு, அவர்களுக்குப் பிடித்தமான தின்பண்டங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உருக்கமாக நினைவு கூர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் பேரணியாக பழைய பாலக்கரை பகுதியில் உள்ள நினைவிடத்திற்குச் சென்றனர். அங்கு, மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இந்த துயர சம்பவம், பல குடும்பங்களின் வாழ்வை புரட்டிப் போட்ட ஆறாத வடுவாக இன்றும் நிலைத்து நிற்கிறது.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, தீ விபத்தில் குழந்தைகளை இழந்த குடும்பங்களில், அக்கா, தங்கை, அண்ணன், தம்பி போன்ற உறவுகளை இழந்த பலர் தற்போது வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு அவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீ விபத்தில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த இன்பராஜ் கூறுகையில், 'பள்ளியில் தீ விபத்து நிகழ்ந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் இங்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறோம். இந்த நாளை நினைவுக்கூர்ந்து, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த தினத்தை 'குழந்தைகள் பாதுகாப்பு தினமாக' அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
மேலும், 'ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். அதனையும் அரசு நிறைவேற்ற வேண்டும். உயிரிழந்த 94 குழந்தைகளின் குடும்பங்களில் பலர் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நினைவு தினம், குழந்தைகளின் பாதுகாப்பின் அவசியத்தையும், இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.