கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலம் கேட்போரை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.
சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அவரை கண்ணம்பாளையம் குளக்கரைக்கு அழைத்துச் சென்றதாக கார்த்திக் வாக்குமூலம் அளித்துள்ளார். 'எங்கே செல்கிறீர்கள்?' என்று சிறுமி கேட்டபோது, அவர் எதுவும் சொல்லவில்லை. கடைக்குச் சென்று சாக்லேட் மற்றும் திண்பண்டங்கள் வாங்கி கொடுத்ததும், நண்பர் மோகன்ராஜ் கேட்டபோதும் சிறுமி சாக்லேட் கேட்டதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
பின்னர், சிறுமியை கண்ணம்பாளையம் குளக்கரைக்கு அழைத்துச் சென்ற கார்த்திக், அங்குள்ள தென்னந்தோப்பில் வைத்து வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கத்தியபோது, 'சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவேன்' என்று மிரட்டியும் அவர் தொடர்ந்து கத்தியுள்ளார். இதனால் பயந்துபோன கார்த்திக், சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை குளக்கரையை ஒட்டியுள்ள முட்புதரில் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த கொலையில் உடந்தையாக இருந்த மோகன்ராஜையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கார்த்திக், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து கால் மற்றும் கையில் முறிவு ஏற்பட்டது. தற்போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் இந்த வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர்.

