கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஏற்கெனவே கரூர் சென்றிருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் துரதிர்ஷ்டவசமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
ஆனால், இந்த உயிரிழப்புகள் த.வெ.க. பிரச்சாரத்தின்போது நிகழ்ந்தவை என்பதால், த.வெ.க. அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது. மேலும், இந்த 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன்பே இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் முக்கியத்துவத்தைக் குறைத்து, அதன் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும் அபாயம் உள்ளது.
சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியானது, பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது ஒருபுறம் இருக்க, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயமாகும். எனவே, இந்த விவகாரத்தில், பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு ஒரு முறையான பொது வழிகாட்டுதலை (Guidelines) உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்" என்று பெ.சண்முகம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
