வங்காள டி20 லீக் போட்டியில் சர்வோடெக் சிலிகுரி ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடிய ஆல்ரவுண்டர் கரண் லால், தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அடாமஸ் ஹவ்ரா வாரியர்ஸ் அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் சிலிகுரி ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த சிலிகுரி ஸ்டிரைக்கர்ஸ் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. இதில், கரண் லால் வெறும் 64 பந்துகளில் 145 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இன்னிங்ஸில் 14 சிக்ஸர்கள் அடங்கும். சுதீப் சாட்டர்ஜி (58) மற்றும் விஷால் பதி (27) ஆகியோரும் ரன் குவிப்பில் பங்களித்தனர்.
232 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அடாமஸ் ஹவ்ரா வாரியர்ஸ் அணி, 19.2 ஓவர்களில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கரண் லால் பந்துவீச்சிலும் தனது திறமையை வெளிப்படுத்தி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அகிலேஷ் யாதவ் (3/19) மற்றும் சிவம் பாரதி (2/21) ஆகியோரும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்தப் போட்டியில் கரண் லால் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவரது 145 ரன்கள் (64 பந்துகள்) வங்காள டி20 லீக் வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகும். மேலும், ஒரே இன்னிங்ஸில் 14 சிக்ஸர்கள் விளாசியதும், ஒரே சீசனில் 22 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். குறிப்பாக, 15-வது ஓவரில் வ்ருத்திக் சாட்டர்ஜிக்கு எதிராக ஒரே ஓவரில் 32 ரன்களைக் குவித்து லீக் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். 'இப்படியொரு இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்று நான் விரும்பினேன். எனது பேட் வேகம் மற்றும் சிக்ஸ் அடிக்கும் திறனை மேம்படுத்த கடினமாக உழைத்துள்ளேன்' என கரண் லால் தெரிவித்தார்.