செய்யாத பணிக்கு ரூ.16 லட்சம்: காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் புகார்

காரைக்குடி மாநகராட்சியில் செய்யாத பணிக்காக சுமார் ரூ.15.80 லட்சம் வழங்கப்பட்டதாக ஒப்பந்ததாரர் ஒருவர் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருப்பவர் பாண்டி. இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'காரைக்குடி மாநகராட்சி மேயர் அறை, துணை மேயர் அறை, கூட்டரங்கு மராமத்து பணி மற்றும் மேலும் 2 பணிகளுக்காக ரூ.18 லட்சத்தில் ஒப்பந்தம் எடுத்தேன். ஆனால், ரூ.18 லட்சத்திற்கான பணியை நான் செய்ய விடாமல், அந்த பணியை திமுகவினரின் நெருங்கிய ஒப்பந்ததாரர் மூலம் செய்து முடித்துள்ளனர். தற்போது, எனது நிறுவனப் பெயரில் காசோலையைக் கொடுத்துவிட்டு, பணத்தை எடுத்துத் தருமாறு கேட்கின்றனர். நான் மறுத்து வருவதால், மற்ற 2 பணிகளுக்கான தொகையை விடுவிக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். நான் எடுத்த பணியை வேறொருவர் மூலம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்' என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், 'கடந்த 3 ஆண்டுகளாக மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சங்கரனிடம் கேட்டபோது, 'ஒப்பந்தப் பணி முடிந்ததால் பணத்தை விடுவித்தோம். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அந்த பணியை செய்யவில்லை என்றால், பணத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கலாம்' என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் காரைக்குடி மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறையான விசாரணை மூலம் உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version