கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சூலூர் அருகே நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரான மேட்டூர் அருகே கொளத்தூர் உக்கம்பருத்தி காடு கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், '10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நல்ல ஆட்சி அமையும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து அதே நிலைமை நீடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுகிறது. இந்த சம்பவத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என பாஜக சார்பில் கேட்டுக்கொண்டார். திமுக ஆட்சியில் நடந்த சம்பவங்கள் தொடர்வதாகவும், இதற்கு முதல்வர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தங்களை மாநில அரசு உடனடியாக கொண்டு வந்து, இரண்டு மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், 'நாடாளுமன்றத்தில் பாரதிய நியாய சங்கீத் (பிஎன்எஸ்) என்ற பெயரில் பழைய ஐபிசி சட்டத்தில் மாற்றங்கள் செய்து, கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய தமிழ்நாடு அரசு ஆங்கிலேயர் காலத்து சட்டத்தையே நடைமுறையில் வைத்துள்ளது. அமித் ஷா கொண்டு வந்த பிஎன்எஸ் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் உள்ளன. இதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை' என்றார். இதற்கிடையில், கோவை சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்து, 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

