‘கருப்பு’ பட வெற்றி: எதிர்பாராத மகிழ்ச்சியில் நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா, த்ரிஷா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள ‘கருப்பு’ திரைப்படம், உலகளவில் இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி குறித்து நடிகர் சூர்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘கருப்பு’ படத்தை அரை மணி நேரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இவ்வளவு விரைவாக எந்தப் படத்திற்கும் ஒப்புக்கொண்டதில்லை என்றும் தெரிவித்தார்.

ஆர்.ஜே. பாலாஜி கதை சொல்லும்போது, திரையரங்கில் படம் வேறு மாதிரி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாகவும், ஆனால் இந்தப் படத்தின் முதல் நாளிலிருந்தே அனைத்தும் சரியாக அமைந்ததாகவும் சூர்யா கூறினார். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ட்ரீம் வாரியர்ஸ் பிரகாஷ், பிரபு ஆகியோருக்கும், சரியான முடிவுகளை எடுக்க உதவிய கருப்பசாமிக்கும் நன்றி தெரிவித்தார். தான் எதிர்பார்த்த வெற்றியை விட, ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

திரையரங்குகளில் சமீபத்தில் இதுபோன்ற வரவேற்பை பார்த்ததில்லை என்றும், மிகப்பெரிய அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் சூர்யா தெரிவித்தார். கடவுளின் அருள் இந்தப் படத்தில் இருப்பதாக உணர்வதாகவும், தமிழ்நாடு மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, துபாய் என அனைத்து இடங்களிலும் இதேபோன்ற வரவேற்பு கிடைப்பதை நினைக்கும்போது இந்தத் தொழிலைச் செய்வது பிடித்துள்ளது என்று மீண்டும் சொல்வதாகவும் அவர் கூறினார்.

படத்தைத் தாண்டி கருப்பசாமிக்கு ஒரு பாடல் வைக்க வேண்டும் என்ற உதவியாளர் குமாரின் யோசனையின் பேரில், படத்திற்கு தொடர்பில்லாத அந்தக் கிளைமாக்ஸ் பாடல் எடுக்கப்பட்டதாகவும், அதை ரசிகர்கள் பாராட்டுவதாகவும் சூர்யா தெரிவித்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படத்தை ரசிப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் பாபு, 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version