கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கணியூர் ஊராட்சியில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான கூடுதல் குடிநீர் வசதி, உடைந்த குடிநீர் குழாய்களை மாற்றுதல், கிராம சாலைகள் சேதமடைந்ததை சீரமைத்தல், குடியிருக்கும் நிலத்தின் பட்டாவை வகை மாற்றம் செய்து ஆவணப் பதிவில் உள்ள தடைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, மக்கள் கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விரக்தியடைந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
தகவல் அறிந்ததும், தாசில்தார் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து, போராட்டத்திற்கு தலைமை வகித்த முன்னாள் ஊராட்சித் தலைவர் வேலுசாமி கூறுகையில், 'மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால், அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து உடனடியாக முடிவெடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும்' எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
