நாகர்கோவில் கிளை சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, 'இதுவரைக்கும் அமைச்சர்களோ அரசு சார்பிலோ யாருமே ஆறுதல் சொல்ல வரவில்லை' என்று குற்றம் சாட்டினார்.
'அரசை மீறி தவறு நடக்கும்போது அதற்கு முதலில் பொறுப்பேற்க வேண்டும். யார் மீதாவது பழியை போட தான் பார்க்கிறார்களே தவிர இந்த அரசு பொறுப்பேற்க தயாராக இல்லை' என்றும் அவர் கூறினார்.
காவல் மரணம் நிகழ்ந்து 3 நாட்கள் கடந்த பின்னரும், முதல்வரிடமிருந்து எந்தவொரு விளக்கமோ அறிக்கையோ வரவில்லை என்றும், எந்தவொரு அமைச்சரும் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவில்லை என்றும் கனிமொழி குறிப்பிட்டார்.
அக்குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கூட அரசு முன்வரவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூட கூறாமல் இருப்பது நம்ப முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இறந்தவர் குடும்பத்துக்கு ஒரு நியாயம் கிடைக்கவில்லை என்றும், நாகர்கோயில் சபரிவர்மன் காவல் மரணத்திற்குத் தவெக அரசு தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், உயிரிழந்த சபரிவர்மனின் குடும்பத்திற்கு உரிய நீதியும், நியாயமும் விரைந்து கிடைக்க வேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக்கொண்டார்.
