திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் காதர் மொகிதீன் விளக்கம் அளித்துள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் பயணித்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றி கழக (தவெக) அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக IUML அறிவித்துள்ளது.
தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், தமிழக வெற்றி கழக (தவெக) அரசுக்கு தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்திருந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி, தற்போது திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகுவதாக தனது பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து IUML தலைவர் காதர் மொகிதீன் ஒரு பேட்டியில், “தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற உன்னத நோக்கிலேயே நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் இந்த அதிரடி முடிவை எடுத்தோம். நாங்கள் எந்தவொரு நிபந்தனையும் இன்றி தவெக-வுக்கு ஆதரவு கொடுத்த போதிலும், நாங்கள் கேட்காத நிலையிலும் தவெக எங்களை மதித்துத் தங்களின் புதிய அமைச்சரவையில் பங்கேற்க அன்போடு அழைப்பு விடுத்தது. இறுதியில் தவெக-விற்கு முழு ஆதரவு அளிப்பது என்றும், திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்றும் தீர்க்கமாக முடிவெடுத்தோம். தவெக ஆட்சி தொடர்வதற்கு எல்லா வகையிலும் நாங்கள் ஒத்துழைப்போம்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “எங்க முஸ்லிம் லீக் ஆபீஸுக்கு இதுவரை எந்த முதலமைச்சரும் வந்தது இல்லை. விஜய் வருவதாக சொன்னபோது நாங்கள் `வேண்டாங்க.. இது ரொம்ப குறுகலான தெரு’ என்றோம். ஆனால் `வந்தால்தான் நல்லா இருக்கும்’ என்று அவர் வந்துவிட்டார். அதற்காக இரவோடு இரவாக எங்க அலுவலகத்தை அலங்கரித்தோம். அவரை உட்கார வைக்க வாடகை சோபாதான் வாங்கி போட்டோம். அதை அடுத்த நாள் காலையிலயே வந்து எடுத்துட்டு போயிட்டாங்க சார்” என்று விளக்கினார்.
திமுக கூட்டணியில் இருந்தபோது வாக்கு கேட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காதர் மொகிதீன், “சொல்லாததை சொன்னால் எப்படிய்யா? நீயாக கேட்பதற்கு பதில் சொல்ல முடியாது. முட்டாள்தனமாக கேள்வி கேட்காதே” என செய்தியாளரை ஒருமையில் பேசி கடுமையாக கடிந்துகொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூத்த அரசியல் கட்சித் தலைவரான காதர் மொகிதீன் இவ்வாறு நடந்துகொண்டது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.