சென்னையின் கண்ணகி நகரில், கபடி பயிற்சியாளர் ராஜு மீது 17 வயது வீராங்கனை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'ஆசைக்கு இணங்கினால் மட்டுமே போட்டிகளில் விளையாட அனுமதிப்பேன்' என்று மிரட்டி, தாய், தந்தை இல்லாத அந்த சிறுமிக்கு ராஜு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டிற்குச் சென்று மூன்று முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், 'அட்ஜெஸ்ட்மென்ட்' செய்யும் சிறுமிகளை மட்டுமே அணியில் சேர்ப்பதாகவும் பயிற்சியாளர் ராஜு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கொடூரமான சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் கண்ணகி நகரில் உள்ள செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகார் அளிக்கப்பட்டதை அறிந்த கபடி பயிற்சியாளர் ராஜு, தற்போது தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.