ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 44 பந்துகளில் 81 ரன்கள் குவித்த இசான் கிஷன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதில் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். மேலும், அவர் 2 கேட்ச்களையும் பிடித்தார்.
போட்டிக்கு பின்னர் பேசிய இசான் கிஷன், 'அணி வெற்றி பெறுவதற்கு ரன்கள் குவித்து, ஒரு நல்ல இலக்கை எட்ட உதவுவது எப்போதும் ஒரு சிறந்த உணர்வைத் தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இன்றைய போட்டியில் எங்கள் அணியின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என்று தெரிவித்தார்.
'இந்த ஆடுகளம் களமிறங்கிய உடனே எளிதாக 200 ரன்களுக்கு மேல் குவிக்கக்கூடிய ஒன்றாக எனக்குத் தெரியவில்லை. பந்துகள் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக எழும்பியதால், 180 ரன்கள் எடுத்தாலே அது ஒரு நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். எனவே பார்ட்னர்ஷிப்கள் மிகவும் முக்கியம் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம்' என்றும் அவர் கூறினார்.
'மூன்றாவது வரிசையில் களம் இறங்கும் ஒரு பேட்டராக, நாம் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், அதை பெரிய ஸ்கோராக மாற்றி, அணிக்கு ஒரு நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அதன்படியே இன்று நாங்கள் 220 ரன்கள் வரை எட்ட முடிந்தது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டதே என்று நினைக்கக் கூடாது. கடந்த காலம் கடந்துவிட்டது. அடுத்து வரும் பந்தின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்' என இசான் கிஷன் தனது பேட்டிங் அணுகுமுறையை விளக்கினார்.
மேலும் அவர், 'உங்களுடைய பலம் என்ன, எந்தெந்த பகுதிகளில் ரன்கள் குவிக்க முடியும், எந்த பந்துவீச்சாளர்களைக் குறிவைத்து விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். களத்தில் சமயோசிதமாக செயல்படுவதே முக்கியம். நான் விஷயங்களை மிகவும் எளிமையாக அணுகினேன். மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் எனது ஷாட்களை விளையாட முடியும் என்கிற நம்பிக்கையுடன் விளையாடினேன்' என்று குறிப்பிட்டார்.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு குறித்துப் பேசிய இசான் கிஷன், 'எங்கள் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக மயங்க் யாதவ், யாஷ் மற்றும் பிற வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிரின்ஸும் சில போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர்கள் அனைவரும் மைதானத்தில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் பந்துவீசும் விதம் மட்டுமல்லாமல், அவர்களின் கடின உழைப்பும், அவர்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் கதைகளும் வியக்கத்தக்கவை' என்று பாராட்டினார்.
அவர்கள் ஃபீல்டிங்கிலும் சிறப்பாக பங்களிப்பதாகவும், எதிர்காலத்தில் அவர்கள் பெரிய பெயரை உருவாக்குவார்கள் என்றும் நம்புவதாகவும் இசான் கிஷன் தெரிவித்தார். ரன் அவுட் வாய்ப்பைத் தவறவிட்டது குறித்துப் பேசிய அவர், 'பேட்டர் ஏற்கனவே கிரீஸுக்குள் வந்துவிட்டார் என்று நான் நினைத்தேன், அது எனது தவறுதான். அடுத்த முறை பெய்ல்களை அகற்றுவதற்கு முன்பு இன்னும் கவனமாகப் பார்ப்பேன்' என்று கூறி பேட்டியை நிறைவு செய்தார்.
