துபாய்: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் இறுதி செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட வேண்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மூண்டது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், இதுவரை இறுதி கட்டத்தை எட்டவில்லை. இந்நிலையில், போர் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
தற்போது, இந்த பேச்சுவார்த்தையின் பயனாக போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.