2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக சந்தித்த அதிர்ச்சிகரமான தோல்வியைப் போலவே, ஐபிஎல் கிரிக்கெட் உலகிலும் ஒரு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் அரசியலில் கொடிகட்டிப் பறந்த திமுக, அதிமுக கட்சிகள் தற்போது 1967-க்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது போல, ஐபிஎல் தொடரிலும் ஆதிக்கம் செலுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன.
ஐபிஎல் தொடரை தங்கள் வசப்படுத்திய இந்த இருபெரும் அணிகள் இதுவரை பத்து கோப்பைகளை வென்றுள்ளன. இத்தகைய சாதனைகளைப் படைத்த அணிகள், இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக 2020-ல் கோப்பையை வென்றது, அதன் பிறகு நான்கு சீசன்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. CSK அணி 2023-ல் கோப்பையை வென்றாலும், அதன் பிறகு நடைபெற்ற மூன்று சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.
அரசியல் களத்தில் திமுக, அதிமுக தங்கள் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்து, மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்களும் CSK மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களை மறுபரிசீலனை செய்து, அதிரடி மாற்றங்களைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, அணிகளின் பயிற்சியாளர் குழுவை மாற்ற வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு நடைபெறும் மெகா ஏலத்தில் வீரர்களை மாற்றி, புதிய ரத்தத்தை அணிகளுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இரு அணிகளும் சரியான கேப்டனை நியமிக்கவில்லை என்றும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். CSK அணி ருதுராஜையும், மும்பை அணி ஹர்திக் பாண்ட்யாவையும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி புதிய கேப்டன்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த இரண்டு ஜாம்பவான் அணிகள் களத்தில் இல்லாத நிலையில், மற்ற அணிகள் எளிதாக வெற்றி பெறுவதாக ரசிகர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த தோல்விகள் இரு அணிகளுக்கும் ஒரு சுயபரிசோதனையைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.