ஐபிஎல் தொடரில் விதிமீறல்கள் தொடர்பாக அனைத்து 10 அணிகளுக்கும் பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். வீரர்கள் அறைகளில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவது, அணி உரிமையாளர்களின் மீறல்கள் மற்றும் புகைப்பிடிப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது (வேப்பிங்) ஆகியவற்றுக்கு இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எட்டு பக்கங்கள் கொண்ட இந்த உத்தரவு, தொடருக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு, சட்ட மற்றும் நற்பெயர் அபாயங்கள் குறித்த கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் வீரர்கள், அணி உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளால் கடுமையான நெறிமுறை மீறல்கள் நடந்திருப்பதாக பிசிசிஐ கண்டறிந்துள்ளது. தனிநபர்களை சட்டச் சிக்கல்களுக்கும், பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கும் வகையிலான சில சம்பவங்களை சுட்டிக்காட்டி, சைகியா இந்த எட்டு பக்க உத்தரவை அனைத்து 10 உரிமையாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
“நடப்பு சீசனில் கவனிக்கப்பட்ட சில சம்பவங்களின் வெளிச்சத்தில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் உடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களிடமும் எதிர்பார்க்கப்படும் தொழில்முறை, ஒழுக்கம், பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் நெறிமுறை ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று சைகியா 10 உரிமையாளர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு எழுதியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வழிகாட்டுதலின் முன்னுரையில், “நடப்பு ஐபிஎல் சீசனில் வீரர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் அணி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சில முறைகேடுகள் மற்றும் நெறிமுறை மீறல்கள் பிசிசிஐயின் கவனத்துக்கு வந்துள்ளன. இந்தச் சம்பவங்கள் சரிசெய்யப்படாவிட்டால், தொடர், சம்பந்தப்பட்ட உரிமையாளர் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க நற்பெயர் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது தனிநபர்களையும் உரிமையாளர்களையும் சட்டரீதியான பொறுப்புகளுக்கும், தீவிர பாதுகாப்பு அபாயங்களுக்கும் உள்ளாக்கலாம்” என்று சைகியா எழுதினார்.
பிசிசிஐயின் முக்கிய கவலைகளில் ஒன்று, அணி மேலாளரின் அனுமதி இல்லாமல் வீரர்களின் ஹோட்டல் அறைகளில் அங்கீகரிக்கப்படாத பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர். . “சில வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள், சம்பந்தப்பட்ட ஐபிஎல் உரிமையாளர் அணி மேலாளரின் ஒப்புதல் இன்றி அங்கீகரிக்கப்படாத நபர்களை தங்கள் ஹோட்டல் அறைகளுக்குள் அனுமதிப்பது கவனிக்கப்பட்டுள்ளது. பல சமயங்களில், அத்தகைய பார்வையாளர்களின் இருப்பு குறித்து அணி மேலாளருக்கு முற்றிலும் தெரியவில்லை. இந்த நடைமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கண்டிப்பாகத் தடை செய்யப்படுகிறது” என்று அந்த ஆவணம் கூறுகிறது.
மாடல் அழகிகளை வைத்து வீரர்களை Honey Trapping போன்ற திட்டமிட்ட சமரச அபாயங்கள் குறித்து உரிமையாளர்களின் கவனத்தை பிசிசிஐ ஈர்த்துள்ளது. பாலியல் முறைகேடுகள் உட்பட இந்திய சட்டத்தின் கீழ் தீவிர சட்டரீதியான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் சம்பவங்களை புறக்கணிக்கப்பட முடியாது என்று சைகியா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்களுக்காக மூன்று முக்கியக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, அணி மேலாளரின் முன் அனுமதி மற்றும் தெளிவான எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், எந்த ஒரு தனிநபரும் , அவரது அடையாளம் அல்லது அணி உறுப்பினருடனான உறவு எதுவாக இருந்தாலும், வீரரின் அல்லது துணைப் பணியாளரின் ஹோட்டல் அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இரண்டாவதாக, விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஹோட்டலின் லாபி அல்லது வரவேற்பறை போன்ற பிரத்தியேகமாகப் பொது இடங்களிலேயே சந்திக்கப்பட வேண்டும். அணி மேலாளர் எழுத்துப்பூர்வமாக அனுமதி அளித்தால் தவிர, எந்த ஒரு விருந்தினரும் தனிப்பட்ட ஹோட்டல் அறைகளுக்குள் அழைத்துச் செல்லப்படக் கூடாது என்பதை பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.
அணி உரிமையாளர்கள் ‘வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் அணுகல்’ (PMOA) நெறிமுறையை மீறிய சம்பவங்களையும் இந்த ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது. நேரடிப் போட்டிகளின் போது உரிமையாளர்கள் களத்தில் வீரர்களை அணுகுவது, அவர்களுடன் உரையாடுவது அல்லது உடல்ரீதியாகத் தொடர்புகொள்வது போன்ற செயல்கள் கவனிக்கப்பட்டுள்ளன.
“போட்டிகளின் போது சில ஐபிஎல் உரிமையாளர்கள் PMOA நெறிமுறையைப் பின்பற்றவில்லை என்பதை பிசிசிஐ கவலையுடன் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, நேரடிப் போட்டிச் சூழல்களில், உரிமையாளர்கள் வீரர்களுடன் தொடர்பு கொள்ள அல்லது நெருங்கிச் சென்று பேச, கட்டிப்பிடிக்க, அல்லது வேறுவிதமாக உடல்ரீதியாக ஈடுபட முயன்ற சம்பவங்கள் கவனிக்கப்பட்டுள்ளன. அத்தகைய நடத்தை, நல்ல எண்ணத்துடன் இருந்தாலும், நிறுவப்பட்ட நெறிமுறைகளுக்கு நேர் எதிரானது மற்றும் அணி ஒருங்கிணைப்பு, போட்டி நடவடிக்கைகளில் தலையிடுவதாக அமையலாம்” என்று அந்த ஆவணம் கூறுகிறது.
இதன் விளைவாக, உரிமையாளர்களுக்காக மூன்று முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவதாக, போட்டி நடைபெறும் போது, ஐபிஎல் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழிகள் வழியாக மட்டுமே வீரர்களுடனோ அல்லது அணி அதிகாரிகளுடனோ தொடர்புகொள்ள முடியும். டக் அவுட், உடை மாற்றும் அறை அல்லது போட்டி நடைபெறும் பகுதி ஆகிய இடங்களில் அவர்களை நேரடியாக அணுகுவதோ அல்லது உடல்ரீதியாக தொடர்புகொள்வதோ கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் உடை மாற்றும் அறையில் புகைப்பிடிக்கும் கருவிகளை (வேப்பிங்) பயன்படுத்திய அண்மைச் சம்பவம் பிசிசிஐயின் கவனத்துக்கு வந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வீரருக்குக் கணிசமான அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் பிசிசிஐயின் புதிய நடவடிக்கைக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
“உடை மாற்றும் அறை மற்றும் தொடர் நடைபெறும் இடங்களின் இதர கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வேப்பிங் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் பிசிசிஐயின் கவனத்துக்கு வந்துள்ளன. வேப்பிங் மற்றும் மின்னணு சிகரெட்டுகள் இந்தியச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தொடர் வளாகத்தில் அத்தகைய செயல்களில் ஈடுபடும் எந்தவொரு தனிநபரும் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் விதிமுறைகளை மீறுவது மட்டுமல்லாமல், பொருந்தக்கூடிய சட்டக் கட்டமைப்பின் கீழ் ஒரு குற்றத்தையும் செய்யக்கூடும்” என்று சைகியா எழுதினார்.
அதன்படி, “உடை மாற்றும் அறைகள், டக் அவுட்கள், அணி ஹோட்டல்கள் மற்றும் பயிற்சி வசதிகள் உட்பட அனைத்து ஐபிஎல் தொடர் நடைபெறும் இடங்களிலும் வேப்பிங், இ-சிகரெட்டுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட அனைத்து பொருட்களின் பயன்பாடும் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது” என்று அவர் அறிவித்தார்.