சென்னை: ஒரு காலத்தில் தோனியை மிகவும் எரிச்சலடைய செய்த ஒரு சம்பவம் குறித்த அவரது அனுபவங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். கேப்டன் கூல்’ என அழைக்கப்படும் தோனி, களத்தில் பொதுவாக அமைதியுடன் காணப்பட்டாலும், சில விதிவிலக்கான தருணங்களில் உணர்ச்சிவசப்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே.
அஸ்வின் தனது அதீத கொண்டாட்டம் மூலம் தோனியை எவ்வாறு ஒருமுறை சீண்டினார் என்பதை கூறியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2024 டிசம்பரில் ஓய்வுபெற்றவர். 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இந்தியாவின் இரண்டாவது அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். சமீபத்தில் ‘ஜியோஸ்டார்’ நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், தனது சிஎஸ்கே பயணம் குறித்து நினைவுகூர்ந்தார்.
முத்தையா முரளிதரன் போன்ற ஜாம்பவான் வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்ததால், தனக்கு ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என அஸ்வின் விளக்கினார். “2008-ல் நான் ஆடவில்லை. 2009-ல் கேப்டவுனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, சச்சின் டெண்டுல்கர் அணிக்கு எதிராகதான் என் முதல் ஆட்டத்தை ஆடினேன். 2009 முதல் 2010 வரை எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
அவர் சிஎஸ்கே-யில் இடம் பிடிக்கக் கனவு கண்டிருந்த காலகட்டத்தில், சேலஞ்சர் டிராபி (Challenger Trophy) போட்டியில் தோனிக்கு எதிராக பந்துவீச அவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் போட்டியில் தோனி இரண்டு முறை அவுட்டானதாகவும், அதில் ஒருமுறை டீப் கவர் பகுதியில் ஒரு பந்தை விளாச, அஸ்வின் டைவ் அடித்து அதைப் பிடித்ததாகவும் விவரித்தார். அந்த கேட்சைப் பிடித்தபோது, தனது மகிழ்ச்சியை தாங்க முடியாமல் உச்சகட்டமாக கொண்டாடியதாகவும் அஸ்வின் குறிப்பிட்டார்.
தன் கொண்டாட்டத்தால் தோனிக்கு எரிச்சல் ஏற்பட்டதை அஸ்வின் நினைவுபடுத்துகிறார். “அவர் (தோனி) இவ்வளவு கொண்டாடறதுக்கு என்ன இருக்கு?’ என்பது போல பார்த்தார். நான் அவரிடம், ‘உங்கள் விக்கெட்டை எடுப்பது என் கனவு. ஒருவேளை சிஎஸ்கே-வில் இது எனக்கு ஒரு கதவைத் திறக்கலாம்’ என்று சொன்னேன். அடுத்த ஆண்டு எனக்கு வாய்ப்பு கிடைத்தது” என ஒரு புன்னகையுடன் தெரிவித்தார் அஸ்வின்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீடித்த வெற்றிக்கும், குறிப்பாக 2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்திலும் அவர்கள் சாதித்ததற்கும் காரணம் என்ன என்பதை ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கினார். “சென்னை, நல்ல பேட்ஸ்மேன்களுடன் மட்டுமல்லாமல், பல தரமான பந்துவீச்சாளர்களையும் கொண்ட முதல் அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. இதுவே சிஎஸ்கே-வின் பலமாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.
அஸ்வின், முரளி விஜய், எஸ். பத்ரிநாத், ஷதாப் ஜகாதி, விருத்திமான் சஹா போன்ற பல உள்நாட்டு வீரர்கள் சிஎஸ்கே அணியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தனர். ”ஷதாப் ஜகாதி பற்றிப் பலருக்குத் தெரியாவிட்டாலும், கோவா அணியின் கேப்டனான அவர், சிஎஸ்கே-வுக்கு மாபெரும் பங்காற்றினார்” என்று அஸ்வின் பெருமையுடன் குறிப்பிட்டார். இது சிஎஸ்கே-வின் தனித்துவமான சூழலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
சிஎஸ்கே அணி நிர்வாகம் களத்திற்கு வெளியே வீரர்களின் தேவைகளையும் கவனித்துக் கொண்டது. “குடும்பச் செலவுகள், பயணச் சீட்டுகள், தங்கும் அறைகள், போக்குவரத்து என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டன. என் பெற்றோர்களும் வர, தேவையான வசதிகள் தயார் நிலையில் இருந்தன” என அஸ்வின் குறிப்பிட்டார்.
இத்தகைய ஏற்பாடுகள் சாதாரணமாகத் தோன்றினாலும், அவை வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த பெரிதும் உதவின. “அழுத்தமான சூழல்களில் இந்த விஷயங்களைப் பற்றி கவலைப்படாமல், கிரிக்கெட்டை மட்டும் கவனிக்க முடிந்தது. நீங்கள் அந்த நல்லெண்ணத்தை வாங்க முடியாது; அது கட்டியெழுப்பப்பட வேண்டும்” என்று அஸ்வின் சிஎஸ்கே-வின் தனித்துவமான சூழலை மெச்சினார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஐபிஎல் வாழ்க்கையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனேயே முடித்துக் கொண்டார். தான் ஆரம்பித்த இடத்திலேயே அதனை நிறைவு செய்ய வேண்டும் என அவர் விரும்பினார். “மீண்டும் சிஎஸ்கே-வில் வாய்ப்பு கிடைத்தபோது, நான் எங்கு ஆரம்பித்தேனோ, அங்கேயே முடித்துக் கொள்ளலாம் என்பதே எனது எண்ணமாக இருந்தது. 2-3 ஆண்டுகள் விளையாடத் திட்டமிட்டேன், அது நடக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
சேப்பாக்கம் மைதானத்தில் தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கனவும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இருந்தது. “ஆனால் நான் அதைச் செய்ய முடியவில்லை. என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி டெல்லியில் நடந்தது. சேப்பாக்கிலேயே நடந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” என்று அவர் தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
சேப்பாக்கம் மைதானம் அஸ்வினின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. “என் கடைசி ஒருநாள் போட்டி சேப்பாக்கில்தான் நடந்தது. அந்த மைதானத்தில் பல நினைவுகள் உள்ளன; அது என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது” என உணர்வுபூர்வமாகப் பகிர்ந்த அஸ்வின், அந்த மண்ணுடனான தனது ஆழமான பிணைப்பைப் பறைசாற்றினார்.