ராய்ப்பூர்: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எட்ட முடியாத உயரத்தில் இருந்த தோனியின் மாபெரும் சாதனையை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து சமன் செய்து புதிய வரலாறு படைத்துள்ளனர். ராய்ப்பூர் ஷாஹித் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் தான் இந்த சாதனை அரங்கேறி உள்ளது.
இந்தப் போட்டி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் 278வது ஐபிஎல் போட்டியாகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தோனியின் சாதனையை (278 போட்டிகள்) இவர்கள் இருவரும் சமன் செய்துள்ளனர். 2026 ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் தோனி இடம் பெற்றிருந்தாலும், இந்த சீசனில் அவர் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி தனது 278 போட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் ஆகிய இரண்டு அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதேபோல், ரோஹித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் (2008-2010) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (2011 முதல் தற்போது வரை) ஆகிய இரண்டு அணிகளுக்காக விளையாடி 278 போட்டிகள் என்ற இலக்கை எட்டியுள்ளார். ஆனால் விராட் கோலி மட்டும் 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய காலம் முதல் தற்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் தோனி, ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் 278 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா 265 போட்டிகளுடனும், தினேஷ் கார்த்திக் 257 போட்டிகளுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 221 போட்டிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும், ஒரு குறிப்பிட்ட அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் விராட் கோலி 293 போட்டிகளில் (சாம்பியன்ஸ் லீக் உட்பட) 9464 ரன்களுடன் உலக அளவில் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை 242 போட்டிகளில் விளையாடி 6370 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவின் இரு பெரும் ஜாம்பவான்கள் ஒரே போட்டியில் தோனியின் சாதனையைச் சமன் செய்திருப்பது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.