19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற கடுமையாக போராடி வருகின்றன. ஆனால், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போன்ற பலம் வாய்ந்த அணிகள் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன. இந்த சீசன் முடிவடைந்ததும், பல அணிகளில் பெரிய அளவிலான அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மோசமான செயல்பாடுகளால் ஐந்து முன்னணி அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் படுதோல்வி அடைந்ததால், சம்பந்தப்பட்ட அணிகளின் உரிமையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், தலைமைப் பயிற்சியாளர்களின் பதவி பறிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் முதலில் வருபவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும், இந்த சீசனில் முதலில் வெளியேறிய அணி மும்பை இந்தியன்ஸ் தான். விளையாடிய 11 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜெயவர்தனே ஆகியோரின் அணுகுமுறைகள் தோல்வியடைந்ததால், அடுத்த சீசனில் இருவரும் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மும்பை நிர்வாகம் புதிய பயிற்சியாளரைத் தேடும் பணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து, பிளே ஆப் வாய்ப்பை இழந்த லக்னோ அணிக்கு, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் பயிற்சியாளர் லாங்கரின் தவறான முடிவுகளே முக்கிய காரணம். கடந்த ஆண்டும் இந்த அணி மோசமாகவே செயல்பட்டது. சிறந்த வீரர்கள் இருந்தும், அவர்களுக்கான சரியான கூட்டணியை லாங்கரால் அமைக்க முடியவில்லை. தொடக்க வீரராக பண்ட்டையும், 3வது இடத்தில் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரனையும் இறக்கியது போன்ற லாங்கரின் வியூகத் தவறுகள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
மூன்றாவது நபராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் உள்ளார். அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அந்த அணி தற்போது 8வது இடத்தில் தவித்து வருகிறது. தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயரின் முன் அனுபவமின்மை அணியின் ஆட்டத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதேபோல், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானியும் ஆபத்தான கட்டத்தில் உள்ளார். பலமான அணி இருந்தும், நிரந்தரமான ஆடும் லெவனை தேர்வு செய்யாமல், தொடர்ந்து செய்த பரிசோதனைகளால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெளியேறும் விளிம்பில் நிற்கிறது. கடைசியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங். இவரது நிலைமை 50-50 ஆக உள்ளது. பல முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறிய நிலையிலும், சிஎஸ்கே தற்போது 5வது இடத்தில் போராடி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் அவரது பதவி தப்பும். ஒருவேளை சிஎஸ்கே வெளியேறினால், பல ஆண்டுகளாக நீடிக்கும் பிளெமிங் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.