சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளதாக மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மக்கள் முன்பை விட நீண்ட காலம் வாழ்ந்தாலும், அந்த கூடுதல் காலத்தில் ஆரோக்கியம், செயல்பாடு, சுயசார்பு மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை உறுதி செய்வதே உண்மையான சவால் என்று அவர் குறிப்பிட்டார்.
யோகா, உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துதல், மனநலத்தை மேம்படுத்துதல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றின் மூலம் முதுமைக் காலத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல உதவும் என்று அமைச்சர் கூறினார்.
இந்த முக்கிய நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பது, யோகாவின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. யோகா தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளன.