மதுரை மக்களைக் கவர்ந்து, இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைப் பெறுவதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வா (20) என்பவர் ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளார். 'MY MADURAI' என்ற பெயரில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடங்கி, மதுரை மக்களை நம்பி வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.
ஃபாலோயர்களை அதிகரிக்க, செல்வா ஒரு சுவாரஸ்யமான பரிசை அறிவித்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், தெப்பக்குளம் போன்ற மக்கள் கூடும் இடங்களில், கல்லூரி மாணவிகளை குறிவைத்து, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களைப் பின்தொடர்பவர்களுக்கு ப்ளூடூத் நெக்பேண்ட் பரிசாக வழங்கி, அதைப் பற்றிய வீடியோக்களையும் வெளியிட்டு வந்துள்ளார்.
முன்னதாக, பெரியார் பேருந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு ஃபாலோயர்களுக்கு ஏராளமான ப்ளூடூத் நெக்பேண்டுகள் வழங்கப்படும் என்று செல்வா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பைக் கேட்டு, இளைஞர்களும் இளம்பெண்களும் காலை 10 மணிக்கு பெரியார் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
இதனைக் கண்ட திடீர் நகர் காவல்துறையினர், செல்வாவிடம் விசாரணை நடத்தினர். பொதுமக்களை அனுமதி இன்றி இவ்வாறு திரட்டக்கூடாது என்று அறிவுரை வழங்கி, அவரை எச்சரித்து அனுப்பினர். ஃபாலோயர்களைப் பிடிக்க செல்வா மேற்கொண்ட இந்த முயற்சி காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.