மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் குரூப் ஏ பிரிவில், தென்னாப்பிரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்ததால், அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.
தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்னும் வெற்றி பெறாமல் கடைசி இடங்களில் உள்ளன.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும். எனவே, இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமெனில், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் மிக அதிக ரன் வித்தியாசத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்திய அணி தனது அடுத்த போட்டியில் ஜூன் 25 அன்று வங்கதேசத்தையும், ஜூன் 28 அன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ள உள்ளது.
ஒருவேளை இந்திய அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வியடைந்தால், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தங்களது போட்டிகளில் வென்று எளிதாக அரையிறுதிக்குச் சென்றுவிடும். இதனால் இந்தியா தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படலாம். எனவே, இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெல்வதோடு, தென்னாப்பிரிக்க அணி தனது மீதமுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் புள்ளிகளை இழக்க வேண்டும். அப்போதுதான் ரன் ரேட் அடிப்படையில் எந்தப் பிரச்சினையும் இன்றி இந்தியா எளிதாக அரையிறுதிக்குச் செல்ல முடியும். 2024 இல் அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறிய இந்திய அணி, இம்முறை மீண்டு வர தீவிரமாக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.