ஐரோப்பிய நாடுகளுக்கான தனது பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை போற்றும் வகையில் இளம் கலைஞர்களின் நடனம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளின் மோதல்கள், எரிபொருள் நெருக்கடி போன்ற தொடர் சவால்களை உலகம் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த தசாப்தம் உலகிற்கு பெரும் சவால்களைக் கொண்டு வந்துள்ளது என்றும், இவற்றை விரைவாக சரி செய்யாவிட்டால் பல தசாப்த கால சாதனைகள் அழியக்கூடும் என்றும், பெரும்பான்மையான மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தார்.
21-ஆம் நூற்றாண்டில் இந்தியா வாய்ப்புகளுக்கான பூமியாகத் திகழ்கிறது என்றும், தொழில்நுட்பம் மற்றும் மனித மதிப்புகள் மூலம் இந்தியா முன்னோக்கிச் செல்வதாகவும் பிரதமர் மோடி கூறினார். மேலும், இந்தியா எவ்வளவு பழமையான நாடோ, அதே அளவுக்கு நவீனத்துவத்தையும் அடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே, அவரது நெதர்லாந்து பயணம் இன்று நிறைவடைந்தது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், 'எனது நெதர்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது உறவை மூலோபாய நட்புறவாக இது உயர்த்தி உள்ளதுடன், நீர்வளம், அரை கடத்திகள், புதிய கண்டுபிடிப்பு, பாதுகாப்பு, நீடித்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளோம். வருங்காலத்திற்கான உயர்ந்த இலக்கை கொண்ட செயல்திட்டம் ஒன்றையும் வகுத்துள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த வரவேற்பு அளித்து, தனிப்பட்ட முறையில் விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிய நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். வரும் ஆண்டுகளிலும் இந்தியா-நெதர்லாந்து இடையேயான நட்புறவு வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்தப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது, 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றான சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த அரிய கலைப்பொருட்கள், லெய்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த 300 ஆண்டுகளாக இருந்தன. இந்த செப்பேடுகள் சோழர்களின் பெருமையையும், புத்த மதத்திற்கு அவர்கள் அளித்த ஆதரவையும் பறைசாற்றும் முக்கிய ஆவணங்களாகும். 30 கிலோ எடை கொண்ட 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையத்தால் பிணைக்கப்பட்டு, முதலாம் ராஜேந்திர சோழரின் முத்திரையுடன் காணப்படுகின்றன. இவை முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்தவை என பதிவுகள் தெரிவிக்கின்றன. இது, இந்தியாவின் கலாச்சார பாரம்பரிய மீட்பு முயற்சிகளில் கிடைத்த மிக முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.