மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் நேரடி உதவியாளர் சந்தர்நாத் ராத் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி தலைமையில் 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை சிபிஐ அமைத்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மே 9ஆம் தேதி சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனிடையே, முதலமைச்சரின் உதவியாளர் சந்தர்நாத் ராத் மே 6ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவை என்பதும், குற்றவாளிகள் வெளிமாநிலத்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் சென்ற போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், 3 கூலிப்படையினர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வடக்கு 24 பர்கானா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 13 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இந்த வழக்கின் பொறுப்புகளை மாநில காவல்துறையிடமிருந்து சிபிஐ அதிகாரிகள் நேற்று முறைப்படி பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு மேற்கு வங்க காவல்துறை பரிந்துரைத்திருந்தது. தற்போது, சிபிஐயின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.