இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்திய அக்சர் பட்டேல், ஆட்டநாயகன் விருதை வென்றதோடு, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மகத்தான சாதனைப் பட்டியலிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
பர்மிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பந்துவீசிய அக்சர் பட்டேல் தனது 9.5 ஓவர் வீச்சில் 62 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர், இந்திய அணி சேஸிங்கில் கடினமான சூழலில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய அவர், 52 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 50-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து, 4-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அக்சர் பட்டேல் படைத்துள்ளார். இந்தச் சாதனைப் பட்டியலில் அவர், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 50 ரன்களுக்கு மேல் குவித்து, 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியல் இதோ:
* கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (1988): 70 ரன்கள், 5 விக்கெட்டுகள்
* சச்சின் டெண்டுல்கர் (1998): 141 ரன்கள், 4 விக்கெட்டுகள்
* சவுரவ் கங்குலி (1999): 130 ரன்கள், 4 விக்கெட்டுகள்
* சவுரவ் கங்குலி (2000): 71 ரன்கள், 5 விக்கெட்டுகள்
* யுவராஜ் சிங் (2008): 118 ரன்கள், 4 விக்கெட்டுகள்
* யுவராஜ் சிங் (2011): 50 ரன்கள், 5 விக்கெட்டுகள்
* ஹர்திக் பாண்டியா (2022): 71 ரன்கள், 4 விக்கெட்டுகள்
* அக்சர் பட்டேல் (2026): 57* ரன்கள், 4 விக்கெட்டுகள்
தற்போது இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 57 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அக்சர் பட்டேல் இந்த மாபெரும் வீரர்களின் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
முன்னதாக, இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஜோ ரூட் (76 ரன்கள்) மற்றும் லியாம் டாசன் (68 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 258 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் பின்வரிசை ஆட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தினார்.
இதையடுத்து 259 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, ஒருகட்டத்தில் 160 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஜோடி மிகவும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தனர். இருவரும் ஆட்டமிழக்காமல் நின்று இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். சுந்தர் – அக்சர் ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 45.2 ஓவர்களில் 262 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
