ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்தத் தொடரில் பேட்டிங்கில் 3 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 238 ரன்களை சுப்மன் கில் குவித்துள்ளார். வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் சுப்மன் கில், அணியின் செயல்பாடு மற்றும் இளம் வீரர்களின் அபார வேகம் குறித்துப் பேசினார். குறிப்பாக, குர்னூர் பிரார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வீசிய முதல் ஸ்பெல் பார்ப்பதற்கே மிக அற்புதமாக இருந்தது. நிலவிய தட்பவெப்ப நிலைக்கு, அவர்கள் அந்த அளவுக்கு வேகத்துடன் பந்துவீசியது சாதாரணமான விஷயம் அல்ல. அது ஆச்சரியமாக இருந்தது. அவர்களுக்கு மேலும் ஒரு ஓவர் கூடுதலாகக் கொடுக்க நான் விரும்பினேன், ஆனால் அவர்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர்.
இந்தத் தொடரில் நாங்கள் திட்டமிட்டிருந்த பல விஷயங்கள் சரியாக நடந்துள்ளன. குறிப்பாக, மிடில் ஓவர்களில் (Middle overs) ஆட்டத்தின் தீவிரத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். பந்துவீச்சில் மிடில் ஓவர்களில் எப்படி விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது குறித்தும், பேட்டிங்கில் எப்படி கூடுதல் ரன்களை எடுப்பது என்பது குறித்தும் நாங்கள் அதிகம் ஆலோசித்தோம். அடுத்து நாங்கள் இங்கிலாந்து செல்லவிருக்கிறோம். அங்குள்ள சூழல், தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் சூழலுக்கு நெருக்கமாக இருக்கும். எனவே, அங்கு எந்த மாதிரியான காம்பினேஷனுடன் விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதற்குள் அணியில் உள்ள அனைவரும் முழு உடற்தகுதியுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன். இங்கிலாந்து தொடர் நல்லதொரு சவாலாக இருக்கும் என்று சுப்மன் கில் தெரிவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் தனது அடுத்தடுத்த வெளிநாட்டுத் தொடர்களுக்குத் தயாராகி வருகிறது. குறிப்பாக, குர்னூர் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் வேகம் இந்திய அணிக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு கிடைத்த முதல் தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.