ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தேர்வு கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் சுப்மன் கில், தனது ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதார், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கேப்டன் சுப்மன் கில் உட்பட சாய் சுதர்சன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அறிமுக வீரர் மானவ் சுதார் என மொத்தம் 6 வீரர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது சொந்த ஐபிஎல் அணி வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேல் அணியில் சேர்க்கப்படாததும், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதும் இந்த விவாதத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் என்பது பொறுமையையும், ஐந்து நாட்கள் தாக்குப்பிடித்து ஆடும் திறனையும் சோதிக்கும் விளையாட்டு. ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி முடிவடைந்த உடனேயே டி20 ஃபார்மட்டில் இருந்து டெஸ்ட் போட்டிக்கு மாறும் சூழலில், ஐபிஎல் ஆட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் தன்னை நிரூபிக்காத சாய் சுதர்சன் மற்றும் அறிமுக வீரர் மானவ் சுதாருக்கு உடனடியாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வீரர்கள் இப்போட்டியில் சொதப்பினால், கேப்டன் கில் மீதான சார்பு குற்றச்சாட்டுகள் மேலும் வலுப்பெறும் என்பதில் சந்தேகமில்லை.