ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நேற்று காலை அதிகாரிகளுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. விமானம் தரையிறங்குவதற்கு முன்பே குண்டு வெடிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தகவலை அடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விமானம் தரையிறங்கியவுடன், பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றி தனிமைப்படுத்தினர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் விமானத்தை முழுமையாக சோதனை செய்தனர்.
தீவிர சோதனைகளுக்குப் பிறகு, விமானத்தில் எந்த வெடிகுண்டும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்னஞ்சல் அனுப்பியவர் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.