கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சிகினி பாளையா அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், திருமண நாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று காலை குனிகல்லில் இருந்து துமகூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் எதிரே வந்த காருடன் அந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த குனிகல் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் மண்டியா மாவட்டம் சுவர்ணா சந்திரா பகுதியைச் சேர்ந்த குமார் நரசிம்மசாமி (65), அவரது மனைவி காயத்ரி (60), குமார் நரசிம்மசாமியின் தங்கை காயத்ரி (55) மற்றும் கார் டிரைவர் என்பது தெரியவந்தது. டிரைவரின் முழு விவரம் உடனடியாக தெரியவில்லை.
குமார் நரசிம்மசாமி தனது மனைவி மற்றும் தங்கையுடன் திருமண நாளை கொண்டாட கோவில் நகரமும், மலை வாசஸ்தலமுமான தேவராயதுர்காவுக்கு சென்றிருந்தார். அங்கு திருமண நாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து குனிகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.