புனித சலேத் மாதா கோவில்: அற்புத நீரூற்று அதிசயம்!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவபட்டிபுதூரில் உள்ள புனித சலேத் மாதா திருத்தலத்தில் நடைபெற்ற திருவிழாவில், தேர் பவனிக்கு மத்தியில் திடீரென நீரூற்று தோன்றியது பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், நவநாள் சிறப்பு வழிபாடு கடந்த 13-ஆம் தேதி தொடங்கி தினமும் மாலை சிறப்பு திருப்பலிகளுடன் நடைபெற்றது. கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற மின் தேர் பவனி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. நேற்று முன்தினம் நடைபெற்ற பெரிய தேர் பவனிக்கு பின்னர், புனித சலேத் மாதா சப்பரத்தை சுற்றி பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் படியிட்டு வழிபட்டனர்.

திருப்பலி முடிந்த சில நிமிடங்களில், திருத்தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள பாறை பகுதியிலும், அதே நேரத்தில் கோவிலின் தென்பகுதியிலும் திடீரென நீரூற்றுகள் பொங்கி எழுந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த வேளையில் நிகழ்ந்த இந்த அற்புதம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த செய்தி பரவியதும், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திருத்தலத்திற்கு வந்து நீரூற்றுகளை கண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.

கடந்த மார்ச் 29-ஆம் தேதி முதன்முதலாக சிறிய அளவில் நீரூற்று தோன்றிய நிலையில், கோடை காலத்திலும் வறட்சியிலும் தொடர்ந்து பல இடங்களில் நீரூற்று ஏற்பட்டு வருவது பக்தர்களுக்கு பெரும் வியப்பை அளித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 35 முறைக்கு மேல் திருத்தலத்தைச் சுற்றி நீரூற்று தோன்றியுள்ளது. இதனை அன்னையின் அருளின் அடையாளமாக பக்தர்கள் கருதுகின்றனர். இந்த அதிசய நீரூற்றால், மறவபட்டிபுதூர் புனித சலேத் மாதா திருத்தலம் தற்போது பக்தர்களின் முக்கிய கவனத்தை ஈர்த்து வருகிறது. வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version