மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குரூப் 1 தேர்வில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான காலி பணியிடங்கள் வெறும் 26 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், அவர் மனிதவளத்துறை அமைச்சராக இருந்தபோது, அம்மா ஆட்சியில் அதிகபட்சமாக 67,529 பேர் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும், இதர துறைகளில் 1,68,306 பேர் என மொத்தம் 2,35,835 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியது அம்மா அரசின் சாதனை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய கவர்ச்சி மாடல் அரசு, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
'உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!!' என்று தனது பதிவின் முடிவில் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.