தமிழக அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. முதல் நியமனத்தின் மூன்று மாதங்களுக்குள் சொத்துகள், கடன்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜன் தலைமையிலான நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த விதிமுறை அமல்படுத்தப்படுகிறது. Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 – Rule 7(3)-ன் கீழ், அரசு ஊழியர்கள் அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன்கள், பொறுப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் Schedule-I இல் உள்ள Form I முதல் Form V வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, ஊழலைத் தடுக்கவும், வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் குறித்த விசாரணைகளுக்கு உதவவும் முக்கியப் பங்காற்றுகிறது.
அனைத்து துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகள், தங்களுக்குக் கீழ் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் இந்த விதியைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பெறப்படும் சொத்து அறிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்பட வேண்டும். ஏற்கனவே 07.06.2007 அன்று வெளியிடப்பட்ட அரசுக் கடிதத்தில் வழங்கப்பட்ட வழிமுறைகளையும் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை, அரசு ஊழியர்களிடையே வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, ஊழலைக் கட்டுப்படுத்தும் கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்தவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் தொடர்பான புகார்களுக்கு அடிப்படை ஆதாரமாகவும் அமையும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியர்களும் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு, உரிய காலக்கெடுவிற்குள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.