ஆளுநரின் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்: உதயநிதி ஸ்டாலின்

மதுரைக்கு சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் ஒரு நியமனப் பதவியில் இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தியுள்ளார். இது அரசியலமைப்புக்கும் மாநில உரிமைக்கும் எதிரானது. இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த அரசுக்கும் கடும் கண்டனங்கள். ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும்போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களமிறங்கும் என ஆளுநர் பேசியது அடாவடித்தனம். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கூவத்தூர் ஆட்சி காலத்தைப் போல, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் 'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற வரலாறு திரும்புகிறது. ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு என்ன சமரசம் செய்யப்பட்டது என்று சட்டப்பேரவையில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை சமரசம் செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை கொள்முதல் செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற பயத்தில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா? முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.

ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version