லண்டனில் இருந்து வெளியான புகழ்பெற்ற ‘தி லான்செட்’ மருத்துவ இதழின் சமீபத்திய ஆய்வறிக்கை, உலகை உலுக்கியுள்ளது. உலகளவில் சுமார் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இருமடங்கு அதிகரித்துள்ளது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
இந்த மனநல பாதிப்புகள் பெண்களிடம் அதிகமாகக் காணப்பட்டாலும், ஆட்டிசம், கவனக்குறைபாடு, ஆளுமை குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஆண்களிடையே அதிகமாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. குறிப்பாக, 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதட்டம் 158 சதவீதமும், மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் 131 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதாவது, பூமியில் வாழும் ஒவ்வொரு 7 பேரில் ஒருவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா தொற்றுக்கு முன்பே மனநல பிரச்சனைகள் அதிகரித்து வந்த நிலையில், கரோனா பெருந்தொற்று காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்தப் பிரச்சனைகள் மேலும் தீவிரமடைந்துவிட்டன. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பிரச்சனைகள் பழைய நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு இந்த மனநல பாதிப்புகளின் உச்சகட்டமாக இருந்துள்ளது. இதில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
இந்த கடுமையான மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண, உலகளவில் மனநல சேவைகளை அதிகரிப்பது மட்டும் போதாது என்று ‘தி லான்செட்’ ஆய்வு வலியுறுத்துகிறது. வாழ்க்கை முறையில் தெரபி, தேவைப்படும் நேரங்களில் மருந்துகள், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, போதுமான உறக்கம் மற்றும் சமூக ஈடுபாடு போன்ற பல மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையின் முதன்மை ஆசிரியரான டாக்டர் டேமியன் சான்டோமவ்ரோ, 'இந்த அளவிற்கு பாதிப்பு இருப்பதை அறிந்து நான் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன்' என்று கூறியுள்ளார்.
