திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர் நெடுஞ்சாலைத் துறையில் சாலை அமைக்காமலேயே பணம் எடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள வேலு, கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் அமைச்சராக இருந்தபோது, நெடுஞ்சாலைத் துறையில் சாலைகள் அமைக்கப்படாமலேயே அதற்கான பணம் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது.
தற்போதைய அரசு பொறுப்பேற்ற நிலையில், வேலு மற்றும் அரசு அதிகாரிகளான ஒன்பது பொறியாளர்கள், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பரும், ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஒப்புதல் பெற்றது. இதன் அடிப்படையில், கரூரில் சாலை அமைக்காமலேயே 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக முன்னாள் அமைச்சர் வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 25 ஆம் தேதி, சென்னை, கரூரில் உள்ள வேலு வீடு உட்பட தமிழகம் முழுவதும் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் 40 லட்சம் ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை வேலு மறுத்திருந்தார். இந்நிலையில், நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.