தென்கோடி மாவட்டத்தின் முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்' என்று வலம் வந்த சூரியக் கட்சிப் புள்ளி ஒருவர், தற்போது பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்.
பெரிய வீட்டு 'மாப்பிள்ளை சார்' மூலம் சென்னைக்கு மாதாமாதம் 'உரிய மரியாதைகள்' அனுப்பி வந்தாராம் இவர். இதற்காக, மாப்பிள்ளை சார் இம்முறை அவருக்கு எம்எல்ஏ சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த சீட் மூலம் அமைச்சர் பதவியையும் அடைந்துவிடலாம் என கனவு கண்ட அவருக்கு, தலைமையில் இருந்து தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, உள்ளாட்சிப் பதவியை ராஜினாமா செய்யுமாறு உத்தரவு வந்ததாம். அதற்கேற்ப, 'விசில் பார்ட்டி' வேட்பாளரை தன் பக்கம் இழுத்து, இலைக் கட்சி வேட்பாளர் 'சுந்தரமானவரை' வீழ்த்த வியூகம் வகுத்தாராம்.
'சுந்தரமானவர்' மற்றும் 'விசில் பார்ட்டி' வேட்பாளர் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இலைக்கு விழும் சாதி வாக்குகளைப் பிரிக்க, 'விசில் பார்ட்டி'க்கு 2 கோடி ரூபாய் ரொக்கமும், 5 பிரச்சார வாகனங்களையும் முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்' ஏற்பாடு செய்துகொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சாதி வாக்குகளைப் பிரிப்பதற்காக மட்டுமே களமிறக்கப்பட்ட 'விசில் பார்ட்டி' வேட்பாளருக்கு மக்கள் அமோக ஆதரவை அள்ளித் தந்துவிட்டார்களாம். இதனால், தேர்தல் முடிவில் இலைக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட, முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்' தோல்வியைத் தழுவினாராம்.
தற்போது, இவருக்குப் பதிலாக, நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த 'துணை வணக்க' அம்மணி ஒருவர் 'வணக்கத்துக்குரியவராக' அமர்ந்து ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார். சொந்த செலவில் தனக்குத் தானே சூனியம் தேடிக்கொண்ட இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்ல முடியாமல், 'உள்ளதும் போச்சே, உசுரும் போச்சே' என்ற மனநிலையில் தனிமையில் புலம்பித் தவிக்கிறாராம் அந்த முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்'.

