வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாக்களித்த அமெரிக்க தமிழர் கைது!

வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விதிகளை மீறி வாக்களித்த அமெரிக்க தமிழர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தமிழக தேர்தல் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலில், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து வாக்களித்தனர். இதனால், வாக்கு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும், வெளிநாட்டு குடியுரிமை பெற்று, இந்திய பாஸ்போர்ட்டை இழந்த பலர் இந்த தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெளிநாடுகளுக்குத் திரும்பும் பயணிகளின் கைவிரல்களில் தேர்தல் மை உள்ளதா என சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த 17 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்ல முயன்ற எமிரேட்ஸ் ஏர் லைன்ஸ் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கிஷோர் (64) என்பவரின் ஆவணங்களை சரிபார்த்தபோது, அவர் அமெரிக்க குடியுரிமை பெற்று, அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், அவரது கை விரலில் தேர்தல் மை இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கிஷோர் தேர்தல் விதிமுறைகளை மீறி, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சட்டவிரோதமாக வாக்களித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரது துபாய் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை உடனடியாகக் கைது செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவருடன் சேர்த்து, தமிழக தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்து கைதான வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version