தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முதல்வர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில் உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறுகையில், 'மாற்றம், மாற்றம்' என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதற்கான சான்றுகளே இந்த சம்பவங்கள். கோவை சூலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். சூலூர் சிறுமியின் தாய்க்குத் தகவல் தெரிவிக்காமல் அவரது உடல் அவசரகதியில் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவமும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும் சட்ட ஒழுங்கு சீர்குலைவின் உச்சகட்டத்தைக் காட்டுகிறது.
மேலும், முதல்வரின் சொந்தத் தொகுதியான பெரம்பலூரில் போதை கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, 'இது தமிழ்நாடா, உத்தரப் பிரதேசமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்பு 'சிங்கப் பெண்' படை போன்ற வீர வசனங்களைப் பேசிய முதல்வர், தற்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார் என்றும் அவர் கேட்டுள்ளார். பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் நிலையில், காலை கண்துடைப்புக்காக காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி, பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலைமையின் தீவிரத்தை அரசு உணர வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களைத் தடுக்க முதல்வர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், 'தவெகவினர் அதிகார வெறியாட்டம் பற்றி முதல்வர் விஜய் பேசுவாரா?' என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

