பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த 45 வயது குர்பிரீத் சிங், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் 26 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று பேரைக் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிக்க முயன்றார். ஆனால், போலீசார் அவரை கைது செய்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, குர்பிரீத் சிங் கொல்கத்தாவில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது பீகாரைச் சேர்ந்த தினேஷ் ஷா என்பவர் தனது குடும்பத்துடன் அதே ரயிலில் பயணித்துள்ளார். நள்ளிரவில், குர்பிரீத் சிங் தினேஷ் ஷாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த தினேஷ் உயிரிழந்தார்.
ரயில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தபோது, வாரணாசி ரயில் நிலையத்தில் குர்பிரீத் இறங்கி தப்பித்தார். அன்றைய தினம் காலையில், சகல்திஹா ரயில் நிலையம் அருகே ஒரு பயணிகள் ரயிலில் மனாக்ரு என்பவரை குர்பிரீத் சிங் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரது உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை, சந்தவுலி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்ற சிங், அங்கு ஒரு பெண் நோயாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், அவர் தப்பிச் செல்ல விடாமல் பிடித்து கடுமையாகத் தாக்கினர்.
பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சம்பவம் குறித்து நடித்துக் காட்ட நேற்று இரவு போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.
அப்போது, ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கியைப் பறித்த குர்பிரீத் சிங், போலீசாரை நோக்கிச் சுட்டார். இதற்குப் பதிலடியாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டரில் மூன்று போலீசார் காயமடைந்தனர்.
