ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 183 டாஸ்மாக் கடைகளில் 40 கடைகள் மூடப்பட்டு, தற்போது 143 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மது வாங்கிய அதே கடையில் காலி பாட்டில்களை கொடுத்தால், கூடுதலாக வாங்கிய ₹10-ஐ திரும்பத் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்துவதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25-ஆம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, டாஸ்மாக் ஊழியர்கள் சூரியம்பாளையம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி காலி பாட்டில்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என அதிகாரிகள் கூறியதால், உடன்பாடு எட்டப்படவில்லை.
டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், '40 கடைகள் மூடப்பட்டதால் மற்ற கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் காலி பாட்டில்களை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றனர். மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் மது வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், உயர்ரக பாருடன் கூடிய தனியார் மதுபானக் கடைகளை நோக்கி மதுப்பிரியர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள தனியார் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
