அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், அவர் அதிமுகவை பாஜகவுடன் இணைக்க தயங்க மாட்டார் என்று அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், கடந்த ஆட்சியில் கோயில் தங்கம் டெபாசிட் செய்யும் முறை அவசர கதியில் நடந்ததாகவும், இதுகுறித்து பல புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கோயில்களின் நிதியை எப்படி பயன்படுத்தினார்கள் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், முறைகேடுகள் நடந்திருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு எடுக்கவில்லை என்றும், திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்றும், அதில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மதுரையில் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடித்தோர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும், மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையை சீராக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திருப்பரங்குன்றம் மலை மீது ஏற்கனவே உள்ள நடைமுறையின் படியே தீபம் ஏற்றப்படும் என்றும், இதில் எந்த மதவாத சக்தியும் அரசியல் செய்ய நாங்கள் விட மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
யாரைப் பார்த்தும் பயமில்லை என்றும், மிரட்டிய திமுகவைப் பார்த்தே எங்கள் முதல்வர் பயப்படவில்லை என்றும் அவர் கூறினார். 7-8 வருடங்களாக ஒரு சிலர் தங்களது சொந்த இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக செய்தியாளர்களை சந்தித்து வந்தனர் என்றும், செய்தியாளர் சந்திப்பு என்பது mainstream மீடியா வந்த பிறகுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று Benchmark Fix செய்யாதீர்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.