வேலை தேடி திருப்பூர் வந்த கேரள பெண்ணை, வேலை வாங்கி தருவதாக கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், வேலை தேடி ரயில் மூலம் திருப்பூர் வந்துள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். தான் ஒரு பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதாகவும், உடனே வேலை வாங்கித் தர முடியும் என்றும் அந்த வாலிபர் கூறியுள்ளார்.
அதை நம்பிய அந்தப் பெண்ணை, தனது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் அழைத்துச் சென்ற இளைஞர், நள்ளிரவு 1 மணியளவில் திருப்பூர் நல்லூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்தப் பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டு, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அவரிடமிருந்து தப்பிக்க அலறியடித்துக் கொண்டு காட்டுப்பகுதியில் ஓடியுள்ளார்.
உயிருக்கு பயந்து காங்கயம் ரோட்டை நோக்கி ஓடி வந்த அப்பெண், புதுப்பாளையம் பகுதியில் நள்ளிரவிலும் திறந்திருந்த ஒரு பேக்கரிக்குள் நுழைந்து தஞ்சம் புகுந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே பேக்கரி ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வருவதற்குள், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.