திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் அவல நிலைக்கு இன்றைய ஆட்சிதான் காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் இதுபோன்ற துயரங்களில் சிக்கித் தவிக்கும்போது, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், 'ஜனநாயகன்' படத்தின் முதல் காட்சியை பார்த்து கொண்டாடி, அதனுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மட்டுமல்ல, முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க 'விடுமுறை' எடுத்துள்ளதாக செய்திகள் வருவதாகவும், நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று 'Blastu Blastu' கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய 'Nero' அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழக அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
