திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது என்பது முற்றிலும் கட்டுக்கதை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் விஜய் திருடி வருகிறார் என்றும், அவர்தான் ஒரு களவாணி என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'முதல்வர் விஜய், சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கித்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய் களவாடி வருகிறார். அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி' என்று குற்றம் சாட்டினார்.
மேலும், நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சி பரிதாப நிலையில் இருப்பதாகவும், காங்கிரஸில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் காங்கிரஸின் நிலைமை' என்று பதிலளித்தார். திமுக கூட்டணியில் வெற்றி பெற்று, பின்னர் தவெகவுக்கு சென்று பதவி வாங்கியதுதான் காங்கிரஸின் கொள்கையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சராக இருப்பவர் வார்த்தைகளை யோசித்து பயன்படுத்த வேண்டும் என்றும், விஜய் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை என்றும், வெறும் பஞ்ச் டயலாக் பேசி வருகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். 'திமுக – அதிமுக கூட்டணி வைத்து ஆட்சி அமைப்பது என்பது கட்டுக்கதை. திமுக தீயசக்தி என்பதே எனது நிலைப்பாடு. திமுகவை தீயசக்தி என்று கூறி எதிர்த்தது அதிமுக. திமுக எதிர்ப்பு என்ற நிலையில் அதிமுக உறுதியாக உள்ளது' என்று அவர் கூறினார்.
மேலும், விஜய் இன்னும் முதல்வர் அந்தஸ்துக்கே வரவில்லை என்றும், அவருடைய கரூர் பேச்சு நாலாந்தர பேச்சாளர் போல இருந்தது என்றும், வெறும் பஞ்ச் டயலாக் மட்டும்தான் அவர் பேசுகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். '4 கால்கள் இருந்தால்தான் நாற்காலி நிற்கும். விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
